கேரளாவில் நெல் சாகுபடியை நாசம் செய்தும், குறைந்தது பத்துப்பேரைக் கொன்றதாக நம்பப்படும் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை தேனியின் கம்பம் பகுதிக்குள் மீண்டும் நுழைந்துள்ளது.
யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் வரை கம்பம் நகராட்சிப் பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
யானையைப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் அவ்வட்டாரத்தில் குவிந்துள்ளனர்.
யானையை இரவு நேரத்தில் பிடிக்க அதிகாரிகள் சிரமப்படுவதாகவும், யானை மீது மின்சாரம் தாக்காமல் இருக்க அது செல்லுமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
கடந்த மாதம் ஏப்ரல் 29ஆம் தேதிதான் அந்த ஆண் யானையை கிட்டத்தட்ட 150 அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து பிடித்து வனப்பகுதியில் விட்டனர். அது தற்போது மீண்டும் ஊருக்குள் வந்துள்ளது.
யானையை மயக்க ஊசி செலுத்தியும், கும்கி யானைகளைக் கொண்டும் பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
யானையை பிடித்த பின்னர், வெள்ளிமலை வனப்பகுதியில் விடுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.