புதுடெல்லி: ஹரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ், அதுகுறித்து அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ஹரியானா மாநிலத்தின் 90 தொகுதிகளுக்த் தேர்தல் நடைபெற்றது.
ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்னும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளால் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தது.
ஆனால், தேர்தல் முடிவில் பாஜக 48 தொகுதிகளைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக அங்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டும் வென்றது. இந்திய தேசிய லோக் தளம் இரு இடங்களிலும் சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று தொகுதிகளிலும் வென்றனர்.
ஹரியானாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தநிலையில் அக்கட்சி தோல்வியைத் தழுவியது.
முன்னதாக, ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது என்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து, காங்கிரசின் இந்தத் தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராய்வதற்கு மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
டெல்லியில் உள்ள கார்கேயின் இல்லத்தில் நடைபெறும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.