ராமேஸ்வரம்: கச்சத்தீவில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்புத் திருவிழா இந்த ஆண்டும் விமரிசையாகவும் பாதுகாப்புடனும் நடந்துள்ளது.
பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் வருடாந்திர விழா நடைபெற்றது. இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த மீனவர்கள் அந்தத் திருவிழாவை மிக முக்கிய விழாவாகக் கருதுகின்றனர்.
திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டு மொத்தம் 3,741 பேர் பிப்ரவரி 27ஆம் தேதி கச்சத்தீவுக்குப் புறப்பட்டனர்.
பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியக் கடலோரக் காவல்படையினரும் இலங்கைக் கடற்படையினரும் இணைந்து செயல்பட்டனர்.
இயந்திரப் படகுகள், சாதாரண படகுகள் மூலம் ராமேஸ்வரத்திலிருந்து அனைத்துலகக் கடல் எல்லைக் கோட்டிற்கு இந்தியக் கடலோரக் காவல்படையினரால் அழைத்து செல்லப்பட்ட பயணிகள், பின் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் கச்சத்தீவில் இரவு தங்கியிருந்து திருவிழாவில் பங்கேற்ற பிறகு மீண்டும் பாதுகாப்பாக ராமேஸ்வரத்துக்குத் திருப்பி கொண்டுவரப்பட்டனர்.
மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த இந்தியக் கடலோரக் காவல்படையின் கடல், ஆகாயப் பிரிவு அதிகாரிகளும் கண்காணிப்பு அதிகாரிகளும் உச்சவிழிப்புநிலையில் செயல்பட்டனர்.
திருவிழா காலத்தின்போது இலங்கைக் கடற்படையினர் குடிதண்ணீர், மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை வழங்கி பலவிதங்களில் திருவிழாவில பங்கேற்றோருக்கு உதவினர்.

