புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் நடந்துள்ள நிதி முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உத்தராகண்ட் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேதார்நாத் கோயில் நிர்வாகத்தில் மிக முக்கிய விருந்தினர்களின் தங்குமிடம், உணவு, மற்ற செலவுகளுக்காகக் கோயிலின் பொது நிதியிலிருந்து முறையான ஒப்புதல் பெறாமல் முன்தொகை வழங்கப்பட்டுள்ளது. அது நிதி நிர்வாகத்தில் நடந்துள்ள மிகப்பெரிய விதிமீறல் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் தொடர்பில் சுற்றுலாத் துறை துணைச் செயலாளர் அனில்குமார் பாண்டே அனுப்பிய கடிதத்தில், அப்போதைய கோயில் மேலாளர், முதன்மைப் பொறுப்பு அதிகாரி, முதன்மைச் செயல் அதிகாரி ஆகியோர்மீது ‘ஸ்ரீபத்ரிநாத் - கேதார்நாத் கோயில் குழுச் சட்டம் 1939’ன்கீழ், தகுந்த நடவடிக்கை எடுக்க தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரிக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பத்ரிநாத் கோயிலில் கடந்த ஜூலை 2ஆம் தேதி பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பணம் எண்ணப்பட்டபோது, பெரும் திருட்டுச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக மீறி காணிக்கை அறையிலிருந்து பணம் வெளியே கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் தொடர்பில் கோயில் பொறுப்பு அதிகாரி யுத்வீர் புஷ்பவான் அளித்த புகாரைத் தொடர்ந்து, பத்ரிநாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
சிறப்பு புலனாய்வுக் குழு அந்த வழக்கில் இதுவரை ஐந்து முக்கிய சாட்சிகளிடம் நேரடி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகால கோயில் வங்கிக் கணக்கு விவரங்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்கக் கோயில் குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

