புதுடெல்லி: இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்றுவதற்கு அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இன்னும் சில மாதங்களில் கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ‘கேரளம்’ என்று பெயர் மாற்றுவதற்கான தீர்மானத்தை, கடந்த 2023-24ஆம் ஆண்டில் கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள மாநில பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பெயர் மாற்றத்துக்குக் கேரள மாநில சட்டப்பேரவைக்கு அதிபர் பரிந்துரைப்பார். சட்டப்பேரவையின் கருத்துகளைப் பெற்ற பிறகு மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.
பெயர் மாற்றம் தொடர்பான மசோதாவுக்கு அதிபர் ஒப்புதல் வழங்கிய பிறகு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றும். இந்த நடைமுறைகள் முழுமை பெற்றவுடன், கேரளம் என்ற பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

