புதுடெல்லி: கேரள முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு வி.டி.சதீசன் முதல் முறையாக டெல்லி சென்றுள்ளார்.
டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
கேரளாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது.
அதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் அந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து முதல்வராக வி.டி.சதீசன் ஏப்ரல் 18ஆம் தேதி பதவியேற்றார்.
திரு சதீசன் வெள்ளிக்கிழமை (மே 22) இரவு டெல்லி சென்றார். அவருக்குக் காங்கிரஸ் தொண்டர்களும் ஆதரவாளர்களும் டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சனிக்கிழமை சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே. கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களை திரு சதீசன் சந்தித்துப் பேசினார்.
தேர்தலில் தனக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த மேலிடத் தலைவர்களுக்கு திரு சதீசன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இந்தச் சந்திப்பில் புதிய கேரள அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
கேரளாவில் கட்சிக்கு புதிய மாநிலத் தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசனைகள் நடந்து வரும் வேளையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
திரு சதீசன் வரும் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

