புலம்பெயர்ந்த தன் மாநில மக்களுக்காக ஒரு வேலை வாய்ப்பகம் அமைக்கப்படும் என்று இந்தியாவின் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது திரு விஜயன் இதனை அறிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து கேரளா திரும்பியோரும் இப்போது வெளிநாடுகளில் வசிப்போரும் அந்த வேலைவாய்ப்பு இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, வருவாய்த் துறை தொடர்பில் ஏதேனும் மனக்குறை இருந்தால் அதுபற்றி புகார் தெரிவிக்க வெளிநாடுவாழ் மலையாளிகளுக்கென ‘பிரவாசி மித்ரம்’ எனும் இணையவாயிலை கேரள அரசாங்கம் தொடங்கி இருக்கிறது.
வெளிநாடுவாழ் மலையாளிகளுக்கான விரிவான காப்புறுதித் திட்டத்தைத் தொடங்கும் பணியும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக முதல்வர் விஜயன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுவாழ் மலையாளிகள் விவகாரத் துறைக்காக (நோர்க்கா) ஒதுக்கப்படும் தொகை கடந்த ஏழாண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
சட்டபூர்வமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பாதுகாப்பாகவும் செயல்படும் அமைப்புகள் மூலமாக கேரள மக்கள் வெளிநாடு செல்ல ‘நோர்க்கா ரூட்ஸ்’ அமைப்பின் ஆட்சேர்ப்புப் பிரிவு உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அவ்வகையில், விருந்தோம்பல், சுற்றுப்பயணத் துறையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை இவ்வாண்டு அக்டோபரில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.