கொச்சி: தன் படையினரில் நால்வரில் ஒருவர் நீச்சல் தேர்வில் தோல்வியுற்றதால் இந்தியாவின் கேரள மாநிலக் கடலோரக் காவல்துறைக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களில் சிலருக்கு நீச்சலே தெரியாது என்பதுதான் அதிர்ச்சியான தகவல். வேறு சிலரால் இரண்டு நிமிடங்களுக்குள் 50 மீட்டர் தொலைவைக்கூட கடக்க முடியவில்லை.
அண்மையில் கேரளக் கடலோரக் காவல்துறையின் பொறுப்பாளராகத் தலைமை ஆய்வாளர் ஜி பூங்குழலி பதவியேற்றார். அவர் நீச்சல் தேர்வுக்கு உத்தரவிட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 580 அதிகாரிகள் அதில் பங்கேற்றனர். இம்மாதத் தொடக்கத்தில் அத்தேர்வு நடத்தப்பட்டது.
நீச்சல் தேர்வில் தோற்றவர்கள், நீச்சல் வல்லுநர்கள் நடத்தும் 21 நாள் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டப் பயிற்சியில் தேறுவோர் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தொடங்கும் இரண்டாம் கட்டப் பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.
‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் முக்குளிப்புப் பயிற்சியும் அதில் அடங்கும்.
மேலும், மார்ச் 15ஆம் தேதிமுதல் இந்தியக் கடற்படையின் துணையுடன் கேரளக் கடலோரக் காவல்துறையினருக்கு மீட்பு நடவடிக்கைகளில் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.