திருவனந்தபுரம்: மது அருந்தியிருந்தால் மோட்டார்சைக்கிள் ஓட்ட அனுமதிக்காத விவேக தலைக்கவசத்தை இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவிகள் மூவர் கண்டுபிடித்துள்ளனர்.
திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த அந்த முன்னாள் மாணவிகளின் கண்டுபிடிப்பிற்காக அக்கல்லூரி காப்புரிமை பெற்றுள்ளது.
இந்தப் புதிய ‘விவேக தலைக்கவச’ தொழில்நுட்பம் சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் மோட்டார் வாகனத் துறைக்கு ஒரு சொத்தாக விளங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
பேராசிரியர் டாக்டர் ஆர். சிவகுமாரின் வழிகாட்டுதலில், என்.ஆதிரா ரஷ்மி, யு.வி.ஆதிரா, ஏ.ஆதிரா என்ற மாணவிகள் அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அம்மூவரும் 2016ஆம் ஆண்டு மின்னணுவியல் துறை மாணவிகள்.
தலைக்கவசத்துனுள் பொருத்தப்பட்டுள்ள வாயு உணர்கருவி ஒன்று, மது அருந்தியதைக் கண்டுபிடித்து, வாகனத்தை நிறுத்திவிடும். தலைக்கவசத்தைக் கழற்றி வைத்துவிட்டும் வாகனத்தை ஓட்ட முடியாது. ஏனெனில், தலைக்கவசத்தை அணிந்தால் மட்டுமே மோட்டார்சைக்கிளை இயக்க முடியும்.
இதன்மூலம், ஒருவர் மது அருந்தியுள்ளாரா என்பதைக் கண்டறிய இப்போதைக்குப் பயன்படுத்தப்படும் குடியறி கருவியின் (பிரெத்தலைசர்) தேவை இல்லாமல் போகலாம்.