திருவனந்தபுரம்: பொதுமக்களின் புகார் மனுக்களுக்குப் பதிலளிக்கும்போது முதல்வர், அமைச்சர்கள் ஆகியோரை, ‘மாண்புமிகு’ என்ற அடைமொழியுடன் குறிப்பிட கேரள அரசு அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் அம்மாநில நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயல்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு அதிகாரபூர்வ தகவல் பகிர்வின்போது முதல்வர், அமைச்சர்கள் ஆகியோரை மரியாதையுடன் அழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது.
இந்நிலையில், கேரள நிர்வாகச் சீர்திருத்தத்துறை ஆகஸ்ட் 30ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
மாவட்ட ஆட்சியர், பல்துறை செயலர்கள், அலுவலக தலைமை அதிகாரிகள் ஆகியோருக்கு அந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
“பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கும் மனுக்களுக்கும் பதிலளிக்கும்போது முதல்வர், அமைச்சர்கள் ஆகியோரின் பெயருக்குமுன், ‘மாண்புமிகு’ என்ற அடைமொழியைச் சேர்த்து பதில் அனுப்ப வேண்டும்,” என அதில் குறிப்பிடப்பட்டது.
மேலும், அறிவுறுத்தலைப் பின்பற்றாத அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டது.
இந்த உத்தரவு கேரள முதல்வர் பினராயி விஜயனின் அறிவுரையை எதிரொலிப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், இந்த உத்தரவு எதற்காகப் பிறப்பிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை அம்மாநில அரசு வெளியிடவில்லை. இந்த உத்தரவு சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

