கொச்சி: கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தனது நீண்டகால ஊழியர்களில் ஒருவருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பரிசளித்துள்ளது.
திருச்சூரின் ‘இன்ஃபோபார்க்’கில் செயல்படும் வெப் அண்ட் கிராஃப்ட்ஸ் எனும் அந்நிறுவனம், தனது தலைமைப் படைப்பாக்க அதிகாரியான கிளின் ஆன்டனிக்கு இந்த விலையுயர்ந்த பரிசை அளித்தது.
கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வெப் அண்ட் கிராஃப்ட்ஸ் நிறுவனத்தின் முதல் ஊழியர் கிளின்ட்தான். தனது வளர்ச்சிக்கு அவர் முதுகெலும்பாய்த் திகழ்ந்து வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நான்கு பேருடன் தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தில் இப்போது முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
“எங்களது நிறுவனத்தின் முதுகெலும்பே எங்கள் ஊழியர்கள்தான். அர்ப்பணிப்புமிக்க, கடுமையான உழைக்கக்கூடிய ஊழியர்களைக் கொண்டிருப்பது எங்களது பெரும்பேறு. தொடக்கம் முதலே எங்களுடன் இருந்துவரும் திரு கிளின்ட், எங்களது வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறார். அவரது அரும்பணியையும் விசுவாசத்தையும் பாராட்ட விரும்பி, அவருக்கு பென்ஸ் கார் பரிசளித்துள்ளோம்,” என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபின் ஜோஸ் டாம் கூறினார்.
‘டிஸ்லெக்சியா’ எனும் கற்றல் குறைபாட்டுடன் பிறந்த திரு ஜோஸ், பொறியியல் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டவரும்கூட. ஆயினும், 19 வயதில் சொந்தமாக நிறுவனம் தொடங்கிய அவரே கேரள மாநிலத்தின் ஆக இளம் தலைமை நிர்வாக அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.