திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் திங்கட்கிழமை (நவம்பர் 27) கடத்தப்பட்ட ஆறு வயதுச் சிறுமி மின்னல் வேகத்தில் மீட்கப்பட்டார்.
அச்சிறுமி கடத்தப்பட்டதை அறிந்த காவல்துறை தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது. இந்நிலையில், கடத்தப்பட்ட 20 மணி நேரத்திற்குப் பிறகு, அதாவது செவ்வாய்க்கிழமை அபிகைல் சாரா ரெஜி என்ற அச்சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டாள்.
சாரா மீட்கப்பட்ட தகவலறிந்ததும் அவளுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் கொண்டாட்டத்தில் இறங்கி, ஆனந்தக் கண்ணீர்விட்டனர். அவள் மீட்கப்பட்டதை அடுத்து, சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.
கொல்லம் அருகே ஓயூரைச் சேர்ந்த சாரா, திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் தன் எட்டு வயதுச் சகோதரனுடன் துணைப்பாட நிலையத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.
அப்போது அவர்களுக்கு அருகே வந்து நின்ற காரிலிருந்தவர்கள், சாராவை மட்டும் தூக்கிக்கொண்டு, அவளுடைய சகோதரனைக் கீழே தள்ளிவிட்டு காரில் பறந்தனர்.
இரவு 8.15 மணியளவில் சாராவின் தாயாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய ஆடவர், சாரா பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். பின்னர் அழைத்த பெண், அவளை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.5 லட்சம் பணம் தர வேண்டுமெனக் கூறினார்.
அதன்பின் இரவு 10 மணியளவில் தொலைபேசியில் மீண்டும் அழைத்த அப்பெண், ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும் கேட்ட பணத்தைக் கொடுத்தால் மறுநாள் காலை 10 மணியளவில் சாரா அவளது வீட்டிற்கு அருகிலேயே இறக்கிவிடப்படுவாள் என்றும் சொன்னார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஓரிடத்தில் சாரா தனியாக அமர்ந்திருந்ததை உள்ளூர்வாசிகள் கண்டனர்.
முதல்நாள் மாலையிலிருந்தே சாராவின் படம் இணையம் வழியாகப் பகிரப்பட்டு வந்ததால் அவர்கள் உடனே அவளை அடையாளம் கண்டுகொண்டனர்.
சாராவின் வீட்டிலிருந்து 25 கி.மீ. தொலைவில், கொல்லம் நகரின் மையப்பகுதியில் கடத்தல்காரர்கள் சாராவை இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, தன் வீட்டிற்கு அருகிலேயே ஒரு பெண் உட்பட நால்வர் அவளைக் காரில் ஏற்றி கடத்திச் சென்றது எப்படி என்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
கடத்தல்காரர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.