பாலக்காடு: கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி மோட்டார்சைக்கிள்மீது மோதியதில், மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆடவர் உயிரிழந்தார்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் கிறிஸ்துமஸ் நாளன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது.
கார் மோதிய வேகத்தில் மணிகண்டன், 43, என்ற அந்த ஆடவரின் தலை துண்டிக்கப்பட்டு, அப்பால் போய் விழுந்தது. மூன்றரை மணி நேரத் தேடலுக்குப் பிறகு அவரது தலை கண்டுபிடிக்கப்பட்டது.
மீன் விற்று பிழைப்பு நடத்தி வந்தார் மணிகண்டன். அன்று தனக்குக் கிடைத்த மீனுடன் அவர் புதுநகரத்திலிருந்து சித்தூர் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக மோதியதால் மணிகண்டனின் மோட்டார்சைக்கிள் 35 மீட்டர் தள்ளிச் சென்று விழுந்தது. அதன்பின் அது தீப்பிடித்து எரிந்து, முற்றிலும் சேதமடைந்தது.
மணிகண்டனின் உடலும் சின்னபின்னமானதாகக் கூறப்பட்டது.
விலயோடியைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் அக்காரில் இருந்ததாகக் கூறப்பட்டது. உயிரிழந்த மணிகண்டனுக்கு மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர்.

