கேரள மாநிலத்தின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி

கேரள மாநிலத்தின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி

2 mins read
சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்
f313636c-1aa4-4839-9ccc-95e788071903
கேரள முதல்வர் வி.டி. சதீசன். - படம்: இந்து தமிழ் திசை

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி என்றும் கடன் அல்லாத நிலுவைப் பொறுப்புகள் ரூ.48,733 கோடி என்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. முதல்வராக வி.டி. சதீசன் பொறுப்பேற்றார்.

முதல்வரான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார். அதன்படி, நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கேரளச் சட்டப்பேரவையில் வியாழக்கிழமையன்று (ஜூன் 4) தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, கேரள மாநிலத்தின் மொத்தப் பொதுக்கடன் ரூ.5.07 லட்சம் கோடி. மாநிலத்தின் வருவாயில் 77 விழுக்காடு சம்பளம், ஓய்வூதியம், வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கே செலவிடப்படுகிறது. இதனால், வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி மிகவும் குறைந்துவிட்டது. மாநிலம் மிக அதிக அளவிலான நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக மூலதனச் செலவினங்கள் நாட்டின் மிகக் குறைந்த அளவாகவே நீடிக்கிறது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 விழுக்காடு மட்டுமே. அதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண நிலுவைகள் உட்பட மொத்தம் ரூ.48,733 கோடி அளவுக்கு நிலுவைப் பொறுப்புகளைப் புதிய அரசு ஏற்றுள்ளது.

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் ரூ.21,000 கோடி அளவிலான நிலுவைக் கடன் பொறுப்புகளைக் கொண்டுள்ளது. கேரளப் பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.78,851 கோடியாக உயர்ந்துள்ளது. கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம், கேரளக் குடிநீர் வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

இந்த வெள்ளை அறிக்கை குறித்துப் பேசிய முதல்வர் வி.டி. சதீசன், “மாநிலத்தின் நிதிநிலை குறித்த உண்மையான நிலையை அறிந்துகொள்ளும் உரிமை கேரள மக்களுக்கு உண்டு. இந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஏற்கெனவே பொதுவெளியில் கிடைக்கக்கூடியவையே. இந்த வெள்ளை அறிக்கையைத் தயாரித்தது நிதித்துறையே. கடந்த காலங்களில் வெள்ளை அறிக்கைகள், அரசியல் ஆவணங்களாகவே இருந்தன. ஆனால், இந்த வெள்ளை அறிக்கை அப்படி அன்று. நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம், கேரளத்தின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான ஒரு வரைபடமாகச் செயல்படும்,” எனக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
நிதிநிலைஅறிக்கைகாங்கிரஸ்