புதுடெல்லி: இந்தியாவின் குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிராமப்புறப் பகுதிகளில் மக்கள் உட்கொள்ளும் உணவில் பால், பால் பொருள்களின் விகிதம் அதிகம்.
மாறாக, கேரளக் குடும்பங்களின் உணவில் முட்டை, இறைச்சி, மீன் வகைகள் கூடுதல் பங்கு வகிக்கின்றன.
மற்ற மாநிலங்களின் கிராமப்புறப் பகுதிகளில் மக்கள் சாப்பிடும் உணவில் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் அதிகம் அங்கம் வகிக்கின்றன.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) வெளியிட்ட குடும்பச் செலவின ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
ஹரியானாவில் உள்ள குடும்பங்கள் உட்கொள்ளும் உணவில் பால் பொருள்கள் ஆக அதிக பங்கு (41.7%) வகிக்கின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் ராஜஸ்தானும் (35.5%) பஞ்சாப்பும் (34.7%) வருகின்றன.
இப்பிரிவில் சத்தீஸ்கர் (7.5%), மேற்கு வங்க (7.4%) மாநிலங்களில் பால் பொருள்கள் மிகக் குறைவான அளவில் அங்கம் வகிக்கின்றன.
கிராமப்புறங்களைப் பொறுத்தவரை ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள குடும்பங்கள் சாப்பிடும் உணவில் முட்டை, இறைச்சி, மீன் வகைகள் ஆகக் குறைவான அளவு (2.6%) பங்கு வகிக்கின்றன. அவற்றுக்கு அடுத்த நிலையில் பஞ்சாப் வருகிறது.

