கொச்சி: தொழில் சார்ந்த காரணங்களுக்காக துபாய் சென்ற இந்தியப் பெண்ணைக் கட்டிப்போட்டு, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த அப்பெண், தமக்குத் தெரிந்தவராலேயே அக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
அப்பெண்ணுக்கு ரூ.25 லட்சம் தந்து, நடந்ததை மூடி மறைக்க பலமுறை முயன்றபோதும் அதற்கு அவர் உடன்படவில்லை. தம்மைச் சீரழித்தவரின்மீது அப்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன் தொடர்பில் மனோரமா செய்தி ஊடகத்திடம் பேசிய அப்பெண், தான் பட்ட மனவேதனையைப்போல் வேறு யாரும் படக்கூடாது என்றார். அச்சம்பவம் கிட்டத்தட்ட தம்மை உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் கோழிக்கோடு, நடப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் வெளிநாட்டில் வசிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
நடப்புரம் காவல்துறை அவர்மீது வழக்கு பதிந்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.