புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் இருப்போரில் 25 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். குறிப்பாக, தலைநகர் கோல்கத்தாவின் 17 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிக்கவிருப்பது முஸ்லிம் வாக்காளர்கள்தாம்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோல்கத்தாவின் அந்த 17 தொகுதிகளையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
ஆனால், இந்த முறை ஆளும் திரிணாமூல் கட்சி மீண்டும் ஆட்சியைப் பெறுமா பாஜக தட்டிச்செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோல்கத்தாவின் மெட்டியாபுருஸ் தொகுதியில் சுமார் 60 விழுக்காட்டு முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.
அந்நகரின் துறைமுகத் தொகுதியில் சுமார் 51 விழுக்காடும் பாலிகஞ்ச் தொகுதியில் 50 விழுக்காடும் முஸ்லிம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த முறை கோல்கத்தாவின் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். அதனால் அந்தத் தொகுதிமீது அனைவரின் கவனமும் உள்ளது.
மேலும், சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஜிப் பிஸ்வாஸ், காங்கிரஸ் கட்சியில் பிரதீப் பிரசாத் போட்டியிடுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
புதிய முஸ்லிம் கட்சி தொடங்கியுள்ள ஹுமாயூன் கபீர், தனது ஜேயுபி சார்பில் பூனம் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
அத்தொகுதியில் 76 விழுக்காட்டு வாக்காளர்கள் இந்துக்கள். சுமார் 24 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். அதைத் தவிர பவானிபூரில் உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.
அவர்களுடைய வாக்குகள் முஸ்லிம் வாக்குகளில் இருந்து மாறுபடும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது பல லட்சம் முஸ்லிம்கள் வாக்குரிமையை இழந்துள்ளனர்.
எனவே, பவானிபூர் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்போது தெரியவரும்.

