கோல்கத்தா: காணாமல்போன மகனை ஒன்பது ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காததால் மனமுடைந்துபோன தாய், 2024 புத்தாண்டு முதல் வேறுவகையில் சற்று ஆறுதலடையும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இந்நிலையில், தன் மகனின் சிலிக்கான் சிலையை வடித்துள்ள அவர், அதனைத் தன் வீட்டின் முதல் மாடியில், தன் மகனுக்குப் பிடித்த அறையிலேயே நிறுவவிருக்கிறார்.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், கோல்கத்தாவைச் சேர்ந்தவர் கீதா பட்டாச்சார்ஜி, 64.
இவருடைய மகன் அபிஷேக் கடந்த 2014 ஆகஸ்ட் 8ஆம் தேதி அதிகாலையில் பால் வாங்கச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவே இலலை. அப்போது அவருக்கு வயது 28.
அதன்பின் மகனைத் தேட எல்லா முயற்சிகளையும் எடுத்துவிட்டார் திருவாட்டி கீதா. ஆயினும் பயனில்லை.
“காவல்துறை அறிவுறுத்தலின்படி, சீர்திருத்தப் பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஏன் பலமுறை பிணவறைக்குக்கூட சென்று பார்த்துவிட்டேன். ஆனாலும், என் மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று வருத்தப்பட்டார் திருவாட்டி கீதா.
தன் மகனின் விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகள், அறிவிப்புகள் என்பன போன்ற வழிகளிலும் அவர் முயன்று பார்த்துவிட்டார். அவர் தேடிப் பார்க்காத ரயில் நிலையங்களே இல்லை.
“என் வாழ்நாள் வருமானத்தை எல்லாம் என் மகனைக் கண்டுபிடிக்கச் செலவிட்டுவிட்டேன். எல்லாம் வீணாகிப் போயின,” என்று புலம்பினார் அம்மூதாட்டி.
இதனையடுத்து, சுபிமல் தாஸ் என்ற கலைஞரின் துணையுடன் தன் மகனின் சிலையை வடித்துள்ளார் அந்த அன்புத்தாய்.
“தொழில்முறைக் கலைஞரான என்னை திருவாட்டி கீதாவின் துயரம் அழவைத்துவிட்டது,” என்றார் தாஸ்.
ஒவ்வொரு முறை அவர் தன்னைத் தேடி வரும்போதும், அவருக்கு நண்பகல் உணவு வாங்கித் தந்து, பின்னர் தானே அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் தாஸ்.
அபிஷேக் காணாமல் போனதற்கு மறுவாரம் தையல்காரர் தந்த ஆடைகளைத் தன் மகனின் சிலைக்கு அணிவித்துள்ளார் திருவாட்டி கீதா. அத்துடன், காலணிகளையும் இன்னும் இயங்கிவரும் அபிஷேக்கின் கைக்கடிகாரத்தையும் தன் மகனின் சிலைக்கு அவர் அணிவித்துள்ளார்.
தன் மகனுக்கு ஏழு வயதாக இருந்தபோது, தனது 32வது வயதில் கணவனை இழந்தார் திருவாட்டி கீதா. அதனைத் தொடர்ந்து, மாநிலத் தொழிலாளர் துறையில் தனக்குக் கிடைத்த வேலையைச் செய்து வந்த அவர், நாலாண்டுகளுக்குமுன் ஓய்வுபெற்றார்.