திருவனந்தபுரம்: பேருந்துகளில் மின்னிலக்க முறையில் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் வசதியை 2024 ஜனவரி முதல் இந்தியாவின் கேரள மாநிலம் கட்டங்கட்டமாக அறிமுகப்படுத்த இருக்கிறது.
கேரள மாநில அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோர், பற்றட்டை, கடனட்டை அல்லது கைப்பேசிவழி பணம் செலுத்தும் செயலிகள் மூலமாகப் பயணச்சீட்டுக்குக் கட்டணம் செலுத்தலாம்.
பயணச்சீட்டு இயந்திரத்தில் ஒரு ‘கியூஆர்’ குறியீடு இருக்கும். ஜி-பே, ஃபோன்பே போன்ற செயலிகள் மூலமாக அதனை வருடி, கட்டணம் செலுத்தி, பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இதன்மூலம் பேருந்து நடத்துநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே எழும் சில்லறைப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.