புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா விழா திங்கட்கிழமை (ஜனவரி 13) தொடங்குகிறது. இதற்காக முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
உலகளவில் மிகப்பெரிய விழாவாக நடைபெறும் மகா கும்பமேளாவைக் காண 40 கோடிக்கும் அதிகமானோர் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியால் உ.பி.யின் பொருளாதாரம் ரூ.2 லட்சம் கோடி உயரும் என்று இந்திய வணிகக் கூட்டமைப்புத் (கான்பிடரேஷன் ஆப் ஆல் இந்தியா டிரேடர்) தலைவர் மகேந்திர குமார் கோயில் தெரிவித்துள்ளார்.
“கடந்த 2013 கும்பமேளாவின்போது உ.பி.யின் பொருளாதாரம் ரூ.12,000 கோடி உயர்ந்தது. இது கடந்த 2019 கும்பமேளாவில் 1.20 லட்சம் கோடியாக இருந்தது. 2025 மகா கும்பமேளாவால் உ.பி.யின் பொருளாதாரம் ரூ.2 லட்சம் கோடியாக உயரும் வாய்ப்புகள் உள்ளன என்று திரு மகேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவைக் காண வருவோருக்கு முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையை உ.பி. அரசு அறிமுகப்படுத்துகிறது. குறைந்தபட்ச கட்டணம் ஒரு நபருக்கு ரூ.3,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை மூலம் மட்டும் மாநில அரசுக்கு ரூ.150 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளாவுக்கு வருகை தருபவர்களால் உ.பி.யின் பொருளாதாரம் அதிகரிக்கும். அதன் மூலம் பொருள் சேவை வரியும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோடிக்கணக்கில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.