‘சந்திரயான்-4’ விண்கலம் நிலவில் தரையிறங்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது

‘சந்திரயான்-4’ விண்கலம் நிலவில் தரையிறங்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது

1 mins read
a8322cfa-092c-4cd4-a98e-453ed04128e4
பெங்களூருவில் நடைபெற்ற 8வது விண்வெளிக் கண்காட்சியின்போது ‘சந்திரயான்-4’ விண்கலத்தின் மாதிரி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: ‘சந்திரயான்-4’ திட்டத்துக்கான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், நிலவின் தென்துருவப் பகுதியில் ‘சந்திரயான்’ தரையிறங்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோவின்) ‘சந்திரயான்-3’ திட்டம் பெரும் வெற்றி அடைந்தது.

இதையடுத்து, ‘சந்திரயான்-4’ திட்டம் தொடங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.

இம்முறை ‘சந்திரயான்-4’ நிலவில் இருந்து மண்ணை சேகரித்துக்கொண்டு பூமி திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2028ஆம் ஆண்டில் ‘சந்திரயான்-4’ திட்டம் செயல்படுத்தப்படும். இதற்குரிய நிதியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் எந்தப் பகுதியில் விண்கலம் தரையிறங்கும் என்ற எதிர்பார்ப்பு விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் நிலவி வந்தது.

தற்போது ‘எம்எம்-4’ (மான்ஸ் மவுட்டன்) என்ற தென்துருவப் பகுதியில்தான் விண்கலம் தரையிறங்கும் என இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

முன்னதாக, விண்கலம் தரையிறங்க நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்ததாகவும் முடிவில் ‘எம்எம்-4’ என்ற இடம் தேர்வானதாகவும் இஸ்ரோ கூறியது.

மற்ற இடங்களைவிட ‘எம்எம்-4’ பகுதியில் பள்ளங்களும் பாறைகளும் குறைவாக உள்ளன.

மேலும், அங்குள்ள மற்ற சூழலும் விண்கலம் நிலை தடுமாறாமல் தரையிறங்க உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்