புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே, நிரந்தரத் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதாவுக்கு அதிபர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம், மாநில மக்களின் நீண்டகாலத் தலைநகராகும் கனவு நனவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, இதற்கு வழிகாட்டிய பிரதமர் மோடி, அதற்கு ஒப்புதல் அளித்த அதிபர் முர்முவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது ஆந்திர மக்களின் வெற்றி என்றும் குறிப்பாகத் தலைநகருக்காக நிலம் வழங்கிய அமராவதி விவசாயிகளின் தியாகத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
“நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதனைச் சாதித்துள்ளோம்” எனத் தெரிவித்த அமைச்சர் நர லோகேஷ், இந்த நாளை ஒரு வரலாற்றுத் திருநாளாகக் குறிப்பிட்டுள்ளார்.
இம்மசோதா கடந்த ஏப்ரல் 1, 2ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இந்த மசோதா அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு, அவர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து அது திங்கட்கிழமை (ஏப்ரல் 6) அரசிதழில் வெளியிடப்பட்டது.

