புதுடெல்லி: தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி மன்றத்தின் (என்சிஇஆர்டி) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் நீதித் துறையில் ஊழல் என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றுள்ளது.
‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பிலான பாடத்தில், நீதிமன்றங்களின் படிநிலை, நீதிக்கான நடைமுறைகளைத் தாண்டி, நீதித்துறையில் ஊழல், லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது போன்றவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
அப்பாடப் பிரிவு குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் பிப்ரவரி 25ஆம் தேதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
அந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 26) அவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அந்தப் பாடப் புத்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், புத்தகத்தின் அனைத்து நகல்களையும் அரசு உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தவறுக்கு வருந்துவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் என்சிஇஆா்டி தெரிவித்துள்ளது.

