இந்தியாவில் முதல் முறையாக புதுடெல்லி விமான நிலையத்தில் இலகு ரயில் சேவை

2 mins read
713a98f6-4e6a-44b9-924c-725b1171eda9
புதுடெல்லி விமான நிலையத்தில் ஒரு ஆண்டில் சுமார் 7 கோடி பயணிகள் வந்து செல்கிறார்கள். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவிலேயே முதல் முறையாக, புதுடெல்லி விமான நிலையம், தனது அனைத்து முனையங்களையும் இணைக்கும் இலகு ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டபடி பணிகள் முடிந்தால், 2027 இறுதிக்குள், புதுடெல்லி விமான நிலையம், இலகு ரயில் சேவை கொண்டதாக மாறும்.

இதனால், புதுடெல்லி அனைத்துலக விமான நிலையத்தின் மூன்றாவது முனையம், இரண்டாம் முனையம், மற்றொரு பக்கத்தில் உள்ள முதல் முனையம் ஆகியவற்றுக்கு பயணிகள் பயணிப்பது எளிதாக மாறிவிடும்.

புதுடெல்லி அனைத்துலக விமான நிலையம், இது தொடர்பான பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரியிருக்கிறது. அதன்படி, விமான நிலையத்தின் மூன்று முனையங்கள், ஏரோ சிட்டி மற்றும் கார்கோ சிட்டி என நான்கு முதல் ஐந்து நிறுத்தங்களைக் கொண்ட இலகு ரயில் சேவை அல்லது தானியங்கி நகரும் சேவை கொண்டு வரப்படும். 2027ஆம் ஆண்டுக்குள், ஒப்பந்தம் விடுக்கப்பட்டு பணிகள் நிறைவு செய்தால் விமான நிலையத்தின் 7.7 கிலோ மீட்டர் தூரமானது ஒரு இலகு ரயில் சேவை மூலம் இணைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில் சேவை தொடங்கிவிட்டால், தற்போது இரண்டு முனையங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் பேருந்து சேவையே தேவையில்லாமல் போய்விடும்.

புதுடெல்லி விமான நிலையம், இந்தியாவின் மிக பரபரப்பான விமான நிலையமாகும். இங்கு ஒரு ஆண்டில் சுமார் 7 கோடி பயணிகள் வந்து செல்கிறார்கள். இது அடுத்த 6 முதல் 8 ஆண்டுகளில் 13 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைப் பயணிகளும் விரைவாக விமான நிலையத்துக்குள் பயணிக்க இலகு ரயில் சேவை மட்டுமே சிறந்ததாக இருக்கும் என்று தற்போது முடிவெடுத்து, ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்