நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் கைது

நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் கைது

2 mins read
1814f612-3c07-49c8-9e38-35de0bb24722
மிசிர் பேஸ்ரா குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. - கோப்புப் படம்: ஐஏஎன்எஸ்

ராஞ்சி: நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் மிசிர் பேஸ்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாட் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

மிசிர் பேஸ்ரா குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) அவர் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினார்.

ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் இயக்கத்தை வழிநடத்திய முக்கியமான தலைவர்களில் ஒருவர் மிசிர் பேஸ்ரா.

மாவோயிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ள அவரை, தேடப்படும் குற்றவாளியாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்திருந்தது.

பிசின் பேஸ்ரா மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நிலக்கரி, சுரங்கத் தொழிலுக்குப் பெயர்பெற்ற தன்பாட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பிசின் பேஸ்ரா கைது செய்யப்பட்டார்.

அவருடன் இரண்டு மாவோயிஸ்ட் உறுப்பினர்களும் அவருக்கு உதவியதாகக் கருதப்படும் இரண்டு கிராமவாசிகளும் பிடிபட்டனர். இதனால் மாவோயிஸ்ட் அமைப்புக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த சந்தோஷ் மஹதோ உள்ளிட்ட 16 மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுதங்களுடன் செவ்வாய்க்கிழமை ஜார்க்கண்ட் காவல்துறையிடம் சரணடைந்தனர்.

அவர்களில் சந்தோஷ் மஹதோ குறித்து தகவல் அளித்தவர்களுக்குப் பதினைந்து லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் மாவோயிஸ்ட் இயக்கம் பலவீனமடைந்துள்ளது என்றும் அந்த அமைப்பின் முக்கியத் தலைமை, ஆயுத விநியோகம், மறைவிடங்கள் குறித்த முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என்றும் பாதுகாப்புப் படையினர் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்