புதுடெல்லி: மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ள டெல்லி வந்தால் தங்கிச் செல்வதற்கு பாபா கரன்சிங் மார்க் பகுதியில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
நான்கு இடங்களில் தலா 25 மாடிகளுடன் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 184 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளைப் பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை திறந்து வைத்தார்.
இந்தப் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் சுமார் 5,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒவ்வொரு வீட்டிலும் 5 படுக்கை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாப்பாட்டு அறை, விருந்தினர் தங்கும் அறை, வரவேற்பு அறை என்று விசாலமாக இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இது தவிர நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் குடியிருப்பில் தங்களது அலுவலகத்தை அமைத்துக் கொள்ளவும் ஒரு பெரிய அறை கட்டப்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் இருப்பதால் இந்தக் குடியிருப்பில் வீடுகளைப் பெற நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

