போபால்: மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது இந்தூர். நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து 7வது முறையாக முதலிடம் பெற்ற நகரமாக இருக்கிறது இந்தூர். இந்நிலையில், அடுத்தகட்டமாகப் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக இந்தூரை மாற்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிச்சைக்காரர்களுக்குப் பணம் கொடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தூர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், “இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரசாரம் இந்த மாத இறுதி வரை தொடரும்.
“வரும் ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். இந்தூரில் வசிப்பவர்களைப் பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.