பிரயாக்ராஜ்: பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்தியாவில் மில்லியன்கணக்கான இந்து சமயத்தைச் சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளா திருவிழாவில் திங்கட்கிழமையன்று (ஜனவரி 13) பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்.
பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 400 மில்லியன் பேர் கலந்துகொள்வர் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவிழாவை அடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த 45 நாள்களில் மில்லியன்கணக்கான பக்தர்கள் திரளவிருக்கும் 4,000 ஹெக்டர் பரளப்பளவைக் கொண்ட பகுதியில் சுமார் 50,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மக்கள் மிதிபடுவது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க அரசாங்கம் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டது. இரவு பகல் பாராமல் தாங்கள் சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ளதாக இந்தியக் காவல்துறையினர் கூறினர் என்று ஏஎஃப்பி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காணாமற்போய் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களுக்கான பல நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு, கூட்ட நெரிசலில் காணாமற்போகும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தாரைக் கண்டுபிடிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்து சமயப் பிக்குகள் மட்டுமின்றி பெரிய கடவுள் சிலைகளை ஏந்திச் செல்லும் தேர்கள், யானைகள் ஆகியவையும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இடம்பெறுகின்றன.
ஆயிரமாண்டுப் பழைமையான மகா கும்பமேளா திருவிழா, கங்கை, யமுனா, சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சூரிய உதயத்துக்கு முன்னரே பக்தர்கள் அப்பகுதியில் உள்ள நீரில் குளிக்கத் திரளுவர்.
தொடர்புடைய செய்திகள்
மகா கும்பமேளா, தற்காலிகமாக நாடு ஒன்று உருவாக்கப்படும் அளவிலான மாபெரும் நிகழ்வு என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பங்கேற்கும், பங்கேற்கவிருப்போரின் மொத்த எண்ணிக்கை, கிட்டத்தட்ட அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளின் மொத்த மக்கள்தொகைக்கு ஈடாகும் என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.