புனே: மகாராஷ்டிராவில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை மாநில உள்துறை அமைச்சு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், 2025 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் முறையே 48 ஆயிரம் மற்றும் 45 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதனால், மராட்டியத்தில் 2 ஆண்டுகளில் 93 ஆயிரம் பெண்கள் வரை காணாமல் போயுள்ளனர்.
எனினும், அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளால், 2025ஆம் ஆண்டில் 30 ஆயிரத்து 877 பெண்களும், 2024ஆம் ஆண்டில் 36,581 பெண்களும் மீட்கப்பட்டு அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பெண்களில் சிறுமிகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 12,113 ஆகவும் மற்றும் 2024ஆம் ஆண்டில் 11,313 ஆகவும் இருந்துள்ளது. அண்மையில், இந்தத் தகவலை மகாராஷ்டிர மாநிலச் சட்டமன்றத்தில் அம்மாநில உள்துறை அமைச்சு வெளியிட்டது.
காணாமல்போன சிறுவர்களை மீட்டு, அவர்களைக் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக ‘ஆப்பரேஷன் முஸ்கான்’ என்ற தேசிய அளவிலான தேடுதல் வேட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சின் தரவுகளின் அடிப்படையில், கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 15 முதல் 18 வயது வரையிலான 4,989 குழந்தைகள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் குறிப்பாக மும்பை, நவி மும்பை, ராய்காட், நாக்பூர், சத்ரபதி சம்பாஜி நகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள். அவர்களில் 4,813 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

