மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் சந்திரபூரில் வெள்ளிக்கிழமை (மே 22) காலை தெண்டு இலைகளைப் பறித்துக்கொண்டிருந்த நான்கு பெண்களைப் புலி தாக்கியதில் அவர்கள் நால்வரும் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்தச் சம்பவம், சிந்தேவாஹி தாலுகாவில் உள்ள குஞ்சேவாஹி கிராமத்திற்கு அருகே நடந்தது.
பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப்படும் தெண்டு இலைகளைச் சேகரிப்பதற்காகப் பெண்கள் குழு ஒன்று வனப்பகுதிக்குச் சென்றது.
அவர்கள் இலைகளைச் சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தபோது அவர்களைப் புலி தாக்கியது
மாண்ட பெண்கள் குஞ்சேவாஹியைச் சேர்ந்த கவாடாபாய் மொஹர்லே, 45, அனிதாபாய் மொஹர்லே, 40, சுனிதா மொஹர்லே, 38, சங்கீதா சௌதரி, 50, என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தச் சம்பவம் ஒரே இடத்தில் நிகழ்ந்ததா வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்தனவா என்பது குறித்து விவரம் தெரியவில்லை.
முதற்கட்ட தகவல் அறிக்கை வெளிவந்ததும் மேல் விவரங்கள் வெளியிடப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

