புதுடெல்லி: இந்தியாவில் அதிக வரி வருவாயைத் தரும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
நாடு முழுவதும் மாநிலங்களின் நேரடி வரி வருவாய் மற்றும் வருமான வரி வருவாய் குறித்து எஸ்.பி.ஐ. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், நேரடி வரி விதிப்பின்மூலம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா 38.9 விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, டெல்லியைப் பின்னுக்குத் தள்ளி கர்நாடகா 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
டெல்லி 3வது இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும், குஜராத் 5வது இடத்திலும் உள்ளன.
ஒட்டுமொத்த நாட்டின் வரி வருவாயில் முன்னிலை வகிக்கும் இந்த 5 மாநிலங்கள் மட்டும் 70 விழுக்காட்டை கொண்டுள்ளதாக அறிக்கை தெரிவித்தது.
ராஜஸ்தான், பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மூலதன நேரடி வரி வருவாயில் பின்தங்கியுள்ளன.
வருமான வரியைப் பொறுத்தவரையில் கடந்த 2015ஆம் ஆண்டைக் காட்டிலும் 2024ல் 5.1 கோடி பேர் கூடுதலாக வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
வருமான வரி வருவாயில் மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்த மாநிலங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 48 விழுக்காடு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, வருமான வரித்தாக்கல் செய்பவர்களில் 15 விழுக்காட்டினர் பெண்கள் என்று அறிக்கை கூறுகிறது.

