மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி

2 mins read
7bd3b3e5-b491-485a-b143-17ef858c424c
மகாராஷ்டிரா பாஜக தலைவர் ரவீந்திர சவானுடன் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் - ETV பாரத் தமிழ் நாடு

மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

நகராட்சி கவுன்சில்களில் 286ல் 245 இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 6,859 கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் 3,300ல் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் 286 நகராட்சிகள், பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றன.

முதல் கட்டமாக 264 கவுன்சில்களில் கடந்த 2ஆம் தேதியும், மற்ற கவுன்சில்களில் கடந்த 20ஆம் தேதியும் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் பாஜக, சிவசேனா (ஷிண்டே), அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணி, 286 நகராட்சி கவுன்சில்களில் 245 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

75 விழுக்காடு நகராட்சித் தலைவர்கள் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள். 134 நகராட்சிகளில் பாஜக வேட்பாளர்கள் தலைவர்களாகத் தேர்வாகியுள்ளனர்.

கட்சிரோலி நகராட்சி கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீகாந்த் தேஷ்முக் 717 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சஞ்சய் மந்த்வகாடே 716 வாக்குகள் பெற்ற நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தேர்தல் வெற்றி குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி. பிரசாரத்தின்போது, எந்தக் கட்சியையோ, தலைவரையோ நான் விமர்சிக்கவில்லை; குற்றம் சாட்டவில்லை. அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி மட்டுமே விளக்கினேன். நான் 100 விழுக்காடு நேர்மறையாகப் பிரசாரம் செய்ததற்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்