மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நர்சரி பள்ளி ஒன்றின் கழிப்பறையில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பள்ளியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்த அக்ஷய் குமார் (24 வயது) ஆகஸ்ட் 17ஆம் தேதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அக்ஷய் குமார் மற்றொரு வழக்கு விசாரணைக்காக தாலோஜா சிறையில் இருந்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது மும்ரா என்னும் ஊர் அருகே வாகனம் சென்று கொண்டிருக்கும்போது, அந்த வாகனத்தில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் நிலேஷ் மோர் வைத்திருந்த கைத்துப்பாக்கியை அக்ஷய் பறித்துக் கொண்டு காவல்துறை அதிகாரியைப் பார்த்துச் சுட்டார்.
அப்போது அருகேயிருந்த இன்னொரு அதிகாரி தம்மிடம் இருந்த துப்பாக்கியால் திருப்பிச் சுட்டதில், அக்ஷய் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் உதவி ஆய்வாளர் மோர் தொடையில் துப்பாக்கிக் குண்டடிபட்டு காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அக்ஷய் குமாரை காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டுச் சுட்டுக் கொன்றனர் என்றும் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அக்ஷய் குமாரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

