தொடங்கியது உள்ளாட்சி தேர்தல் : மகாராஷ்டிராவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

2 mins read
d5571f68-84fc-4922-af90-f83d57424162
நவி மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் வாக்குகளைச் செலுத்த நீண்டவரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள். - படம்: பிடிஐ

மும்பை: மகாராஷ்டிராவில், மும்பை, புனே உள்பட, 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது.

வியாழக்கிழமை (ஜனவரி 15)  காலை 7 மணிக்குத் தொடங்கியது வாக்குப் பதிவு. இதில் 15,931 வேட்பாளர்களைத் தேர்வு செய்ய, 3.48 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

காலை முதலே மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர். மாநகராட்சியின் பல்வேறு இடங்களுக்கு போட்டி நிலவினாலும், ஆசிய வட்டாரத்திலேயே செல்வாக்கும் வசதியும்மிக்க மாநகராட்சியாகக் கருதப்படும் மும்பை மாநகராட்சியை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை வெல்ல கட்சிகளிடையே கடும் போட்டியும் நிலவுகிறது.

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி நடக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அங்கு நடைபெற்ற 288 தொகுதிக்களுக்கான உள்ளாட்சி தேர்தலில், ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றி பெற்றதும், அதே சமயம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி படுதோல்வியைச் சந்தித்ததும் நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில்,  இதர மாநகராட்சி இடங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ஆளுக்கொரு திசையில் எதிரணியாக இருந்துவந்த உத்தவ் தாக்கரே, மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூட்டணி வைத்துள்ளனர். இது உள்ளாட்சி தேர்தலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே இம்முறை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5:30 மணிவரை நடைபெறும் என்றும், ஜனவரி 16ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பதற்றம் நிறைந்த வட்டாரமாக முன்னறியப்பட்ட இடங்களிலும் அங்குள்ள வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

குறிப்புச் சொற்கள்