அமராவதி: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நான்கு வாயில்களிலும் பிரம்மாண்ட ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. வெளிநாட்டுப் பக்தர்கள் அக்கோவிலை வியந்து பார்த்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் புதுப்பிக்கப்படும் பழமையான கோவில் ஒன்றான பத்திரகாளி அம்மன் கோயிலை மீனாட்சி அம்மன் கோயில் போன்று வடிவமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வாரங்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் கி.பி. 1323ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
9 அடி அகலம் 9 அடி உயரத்தில் பிரம்மாண்டமாகப் பத்திரகாளி அம்மன் அக்கோயிலில் காட்சியளிக்கிறார்.
தினந்தோறும் அக்கோயிலுக்குக் கிட்டத்தட்ட 5,000 பக்தர்கள்வரை வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் 4 முறை பிரம்மாண்டமாகத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.
“பழமை வாய்ந்த பத்தரகாளியம்மன் கோயிலைப் பிரமாண்டமாகப் புதுப்பிக்க வேண்டும். அனைவரும் பிரமிக்கும் வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் போல இக்கோயிலை வடிவமைக்க வேண்டும்,” என்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கோயிலைச் சுற்றிலும் மாட வீதிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரூ.100 கோடி செலவில் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
மேலும் பிரம்மாண்ட ராஜகோபுரங்கள் அமைக்க ரூ.1,000 கோடிவரை செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் போன்று மாதிரிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கட்டுமான பணியில் ஈடுபடும் பொறியாளர்கள் கொண்ட குழுவினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோயில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.