லக்னோ: ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது கைப்பேசியில் காணொளி எடுத்தவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராசியா. இவர் கைப்பேசியில் காணொளி எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில் குஸும்பி ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் சென்ற இவர் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு ரயில் வரும்போது காணொளி எடுத்துள்ளார். ஆபத்தான முறையில் அவர் தண்டவாளத்தில் படுத்திருந்தார். சிறிது பிசகினாலும் அவர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்க நேரிடலாம்.
இந்நிலையில் இவர் எடுத்த காணொளியை, சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டார். இந்த காணொளி பரவலாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து அது ரயில்வே காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ரயில்வே காவல்துறையினர், சவுராசியா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

