மும்பை விமான நிலையத்திற்குள் ஆடவர் ஒருவர் போலியான பயணச்சீட்டைப் பயன்படுத்தி விமான நிலையத்திற்குள் நுழைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சட்டவிரோதமாக விமான நிலையத்திற்குள் நுழைந்த காரணத்திற்காக 37 வயது நூர் ஷேக் கைதுசெய்யப்பட்டார்.
இச்சம்பவம் மே 14ஆம் தேதி நடந்தது.
ஆடவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் தனது தொலைந்த கைப்பேசியைக் கண்டுபிடிக்க விமான நிலையத்திற்குள் நுழைந்ததாகத் தெரிவித்தார்.
ஷேக் கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில் விஸ்தாரா விமானம் மூலம் மும்பையில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் தமது கைப்பேசியைத் தொலைத்ததாகத் தெரிவித்தார்.
இரவு 10 மணிவாக்கில் விமான நிலைய நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் போலியான பயணச்சீட்டைக் காட்டி அவர் உள்ளே நுழைந்தார்.
அதன்பிறகு விஸ்தாரா விமான நிறுவன ஊழியர்களிடம் சென்று போலியான பயணச்சீட்டை அவர் காட்டினார்.
போலிப் பயணச்சீட்டைக் கண்ட ஊழியர்கள் அதிகாரிகளிடம் தகவல் கொடுக்க, அதன்பின்னர் ஷேக்கை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
ஷேக் முன்பு பயணம் செய்த விஸ்தாரா விமானப் பயணச்சீட்டில் தேதிகளை மாற்றி விமான நிலையத்திற்குள் நுழைந்ததாக அதிகாரிகள் கூறினர்.