லக்னோ: ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்று, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிய ஆடவர், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ - ஆக்ரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 12) அவ்விபத்து நேர்ந்தது.
விஜய் குமார் என்ற அந்த 45 வயது ஆடவரும் அவருடைய மகளும் வந்த ஆட்டோரிக்ஷாமீது கார் மோதியது. அதில் அப்பெண்ணும் மாண்டுபோனார்.
கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் குமார், கடந்த 2012 மே மாதம் நிகழ்ந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பெற்றார்.
ஒன்பது ஆண்டுகளைச் சிறையில் கழித்தபின் மேல்முறையீட்டில் சாதகமாகத் தீர்ப்பு வர, கடந்த புதன்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
மறுநாள் மனைவி, மகளுடன் வீடு திரும்பியபோது அவர்கள் சென்ற ஆட்டோரிக்ஷா விபத்தில் சிக்கியது. விஜய் குமாரின் மனைவியும் ஆட்டோ ஓட்டுநரும் காயமடைந்து, கன்னோஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் கார் ஓட்டுநரைக் கைதுசெய்து, காவல்துறை விசாரித்து வருகிறது.

