சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் மேற்பகுதியில் ஆடவர் ஒருவர், விளையாட்டுத் திடலில் தண்டால் (புஷ்-அப்ஸ்) செய்வதைப்போல் செய்துகொண்டிருந்தார்.
காரில் பயணம் செய்த இன்னொருவர் அவ்வப்போது தலையை வெளியே எட்டிப்பார்த்தபடி இருந்தார்.
அந்தச் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் அப்படியே நின்றுபோயின. அதனால் அங்கு நீண்டநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பலரும் காணொளியாகப் படம்பிடித்தனர். அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டனர்.
அந்தக் காணொளியைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, அந்த ஆடவரின் சாகசச் செயலை சிலர் வியப்புடன் பாராட்டினர். ஆனால், பலர் அந்த ஆடவரைத் திட்டித் தீர்த்தனர்.
அவர்களில் சிலர், அந்தக் காணொளி குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் ஹரியானா மாநிலத்தின் குருகிராம் என்ற ஊரின் முக்கிய சாலை ஒன்றில் நிகழ்ந்தது.
போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதால், அந்தப் பகுதிக்கு விரைந்த போக்குவரத்துக் காவலர்கள் அவரை கார் மீதிருந்து இறக்கி கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.
பொது இடத்தில் ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் நடந்துகொண்ட அந்த ஆடவருக்கு ரூ.6,500 அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதியை மீறியதாக அந்த காரை போக்குவரத்துக் காவல்துறை பறிமுதல் செய்தது.
இந்தச் சம்பவம் குறித்து காரின் உரிமையாளரிடம் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
வாகனமோட்டிகள் இதுபோன்று பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சாகச செயல்களுக்கு உடந்தையாக இருக்கக்கூடாது என்றும் யாரும் இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.