புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டம் வித்யார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆடவர் ஜோதி ராஜன் தாஸ், 28.
இவரும் அண்டை கிராமமான ஆனந்த்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்துள்ளனர்.
இதனிடையே, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி காதலியிடம் ராஜன் கேட்டுள்ளார். திருமணத்திற்கு மறுத்தால் தனிமையில் இருந்த புகைப்படங்கள், காணொளிகளைச் சமூக ஊடகத்தில் பதிவிடப்போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், ராஜன் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜன், புதன்கிழமை (டிசம்பர் 18) தனது காதலியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். மேலும், திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜன், தனது காதலியின் வீட்டிற்குத் தீ வைத்தார். தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.
இந்தச் சம்பவத்தில் தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள், கட்டில், மெத்தை உள்ளிட்ட மொத்தம் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய ராஜனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

