இம்பால்: மணிப்பூரில் மேத்தி மற்றும் குக்கி இனப் பிரிவினருக்கு இடையே கடந்த மே 3ஆம் தேதி இனக் கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஏழு மாதங்களுக்கு மேலாகியும் அங்கே அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் சனிக்கிழமை மணிப்பூர் மாநிலத்தின் காங்போக்பி மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் மேத்தி இனப் பிரிவினைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டார். மோரே நகரத்தில் மணிப்பூர் காவல்துறையினருக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களும் அப்பகுதியில் 26 நாள்களுக்குப் பிறகு நடைபெறும் பெரிய கலவரங்கள் ஆகும். கடைசியாகக் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தெங்னவுபால் மாவட்டத்திலுள்ள சைபால் அருகே லெய்தாவோ என்னும் சிற்றூரில் ஆயுதம் ஏந்திய இரண்டு குழுவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் கொல்லப்பட்டனர்.