புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கைத் திருட்டு தொடர்பாக மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 15) விசாரணையைத் தொடங்கினர்.
முறைகேடுகள் நடைபெறுவது குறித்துத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த மாநில முதல்வர் ஆதித்ய நாத் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தார்.
விசாரணையில் ரூ.200 கோடி காணிக்கைப் பணம் மட்டுமல்லாமல், ராமர் கோயிலுக்குக் காணிக்கை அளிக்கப்பட்ட 2 கிலோ எடையுள்ள தங்கக் கதாயுதம், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் ஆகியவையும் காணாமற்போனது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
ராமர் கோயில் அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர்களில் ஒருவருடன் வங்கியால் பணியமர்த்தப்பட்ட முகமையின் ஊழியர்கள் சிலரும் இந்தத் திருட்டைச் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முறைகேடு செய்தவர்கள், ஆதாரங்களை அழித்தவர்கள் பற்றிய விவரங்களை விசாரணைக் குழுவினர் சேகரித்து வருகின்றனர்.
‘ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள், அயோத்தியில் திடீரெனச் சொத்து சேர்த்தவர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளனர்.
அவர்களில் முக்கியமாக அறக்கட்டளைப் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் முன்னாள் ஓட்டுநர் ராம் சங்கர் யாதவ்மீது சந்தேகம் எழுந்துள்ளது.

