மும்பை: மகாராஷ்டிரா அரசுப் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில கல்வி அமைச்சர் தாதா பூசே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்துப் பள்ளிகளிலும் மராட்டிய மொழி கட்டாயமாக்குவதை உறுதிசெய்ய மாநில அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பல பள்ளிகள் மராத்தி மொழி கற்பிப்பதைச் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றார்.
மராத்தி மொழியை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் பரப்புவதிலும் மகாராஷ்டிரா அரசு உறுதியாக உள்ளது என்றார் அவர்.
அரசு உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்படும் என்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தாதா பூசே.
மேலும், மராத்தி மொழியின் பெருமைகளைப் பரப்ப சிறப்பு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மும்மொழித் திட்டத்தைக் கட்டம் கட்டமாகச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்த ஒரு நாள் கழித்து, மகாராஷ்டிரா மாநிலத்திற்கான புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

