பிஷ்கெக்: வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்வதற்குப் பதிலாக இந்தியாவிலேயே திருமணங்களை நடத்தும் ‘வெட் இன் இந்தியா’ (Wed in India) இயக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அவசியமான சூழலை தவிர மற்ற நேரங்களில் அதாவது தேவையற்ற சூழலில் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறும் அவர் மக்களைக் கேட்டு கொண்டுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் தற்போது பிஷ்கெக் நகரில் உள்ளார்.
இந்த நிலையில் அவர் இன்ஸ்டகிராமில் வெளியிட்ட காணொளியில், இந்தியா எந்த அளவுக்கு உள்நாட்டு பொருள்களுக்கும் தற்சார்பு நிலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அந்த அளவுக்கு தனது 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது நமது இளைய தலைமுறைக்கு ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவசியமற்ற சூழலில் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறும் அத்துடன் வெளிநாட்டுப் பொழுதுபோக்கு பயணங்களைக் குறைத்துக் கொள்ளுமாறும் வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்வதை குறைத்து கொள்ளுமாறும் இந்தியக் குடிமக்களை அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே, அனைத்துலகச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2026) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது மாபெரும் சாதனை எனப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பலரின் எதிர்மறை கணிப்புகளைப் பொய்யாக்கி இந்தியா மீண்டும் மிளிர்ந்துள்ளது என்று தமது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசின் தொடர்ச்சியான பொருளியல் சீர்திருத்தங்கள், துரிதமான நிர்வாக நடவடிக்கைகளே இந்த வலுவான வளர்ச்சிக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார் திரு மோடி.
மத்திய கிழக்குப் பதற்றத்திற்கு பிறகு நாட்டின் வளர்ச்சி வேகம் சற்று சவாலை எதிர்கொண்டபோதிலும், இந்தியாவின் உள்நாட்டு நுகர்வுத் தேவை, சேவைத் துறையின் 10 விழுக்காடு எழுச்சி ஆகியவை பொருளியல் சரிவிலிருந்து காப்பாற்றியுள்ளன. உற்பத்தித் துறை 9.2 விழுக்காடு வளர்ச்சியையும், ஏற்றுமதி 12 விழுக்காடு வளர்ச்சியையும் எட்டியுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி கணித்த 7.3 விழுக்காடு வளர்ச்சியை விட இது மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில், உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், 2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் 7.8 விழுக்காடு ஜிடிபி வளர்ச்சி என்பது ஆண்டின் மீதமுள்ள காலத்துக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளியல் உலக அரங்கில் தனித்து நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


