லக்னோ: மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வரவேற்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களுக்குச் சமத்துவத்தையும் சுயமரியாதையையும் வழங்குவதுடன், ‘இந்து சட்ட மசோதா’வின் வாயிலாக அவர்களுக்கு வலுவான சட்ட உரிமைகளையும் வழங்க டாக்டர் அம்பேத்கர் முயன்றார்.
அப்போதைய காங்கிரஸ் அரசு, குறுகிய சாதிய மனப்பான்மையால் அந்த மசோதாவை ஏற்க மறுத்தது. பின்னர், அதனைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து நிறைவேற்றியது.
இதன் விளைவாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாததற்கும் பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், மேம்பாட்டிற்காக எவ்வித உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததற்கும் எதிர்ப்புத் தெரிவித்து டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.
அந்த வகையில், மக்களவை, மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு சிறிய எண்ணிக்கையாக இருக்கலாம். ஆயினும், இது ஒரு தொடக்கம். இதை நாங்கள் வரவேற்கிறோம் என்று அவர் கூறினார்.

