மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ரூ.10 லட்சத்துக்கு உயர்த்த பரிந்துரை

1 mins read
11c05bf0-694b-44fe-ad32-835e1add8bb7
புதுடெல்லியில் கூடிய நாடாளுமன்ற நிலைக்குழு. - படம்: இந்திய ஊடகம்

ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஒரு குடும்ப மருத்துவக் காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரையை சுகாதார நாடாளுமன்ற நிலைக்குழு முன்வைத்துள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் மிகவும் வசதிகுறைந்த 40% குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்வரை மருத்துவக் காப்பீட்டு அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் கடந்த ஆண்டு, பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இதை 60 வயதாகக் குறைக்க சுகாதார நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் மருத்துவ செலவினம் அதிகரித்துள்ள நிலையில், ஒரு குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இக்குழு தனது அறிக்கையில், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

2024ஆம் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.7,200 கோடி ஒதுக்கப்பட்டது. பிறகு இது ரூ.6,800 கோடியாக மாற்றப்பட்ட நிலையில் ரூ.6,670 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

இதுபோல் 2025ஆம் நிதியாண்டில், ரூ.7,300 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு, ரூ.7,605 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. என்றாலும் ஜனவரி 9 வரை செலவிடப்பட்ட தொகை ரூ.5,034.03 கோடியாக இருந்தது.

ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாநிலங்கள் திறம்பட செயல்படுத்துவதன் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாமருத்துவம்செலவு