மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையத்தில் மீத்தேன் இயந்திரச் சோதனை வெற்றி

மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையத்தில் மீத்தேன் இயந்திரச் சோதனை வெற்றி

2 mins read
2ebaf771-7e44-4ae1-af0c-64ab6821caa2
இஸ்ரோ அதன் அடுத்த தலைமுறை ராக்கெட்டுக்கான எல்.ஓ.எக்ஸ்-மீத்தேன் இயந்திரத்தின் முதல் சோதனையை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் வெற்றிகரமாக நடத்தியது. - படம்: இஸ்‌ரோ

திருநெல்வேலி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு செலுத்துகிறது. இதற்கு துருவ செயற்கைக்கோள் ஏவுதள விண்கலம், புவி ஒத்திசைவான செயற்கைக்கோள் ஏவுதள விண்கலம், புவி ஒத்திசைவான செயற்கைக்கோள் ஏவுதள விண்கலம் மார்க்-3 மற்றும் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் பாய்ச்சப் பயன்படும் விண்கலம் என நான்கு வகை விண்கலங்களைப் பயன்படுத்துகிறது.

இதில் நான்கு வகை ஜி.எஸ்.எல்.வி. விண்கலங்களில் சுற்றுப்பாதையின் அடிப்படையில் செயற்கைக்கோள்களின் எடைகள் மாறுபடுகின்றன. பூமி கண்காணிப்பு, புவி நிலையான மற்றும் வழிசெலுத்துதல் ஆகிய மூன்று வகை செயற்கைக்கோள்களைப் பாய்ச்சுவதற்கு இது பயன்படுத்தப்படும். அத்துடன் பல்துறை ஏவுதள விண்கலமாகவும் செயல்படுகிறது.

உள்நாட்டு கிரையோஜெனிக் மேல்நிலையுடன் கூடிய ஜி.எஸ்.எல்.வி. ரக விண்கலம் மூலம் இரண்டு டன் வரை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் பாய்ச்ச முடியும். எல்.வி.எம்.3 என்பது அடுத்த தலைமுறை ஏவுதள விண்கலமாகும்.

இது நான்கு டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களையும் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கு 10 டன் வரை எடை கொண்ட செயற்கைக்கோளையும் பாய்ச்சும் ஆற்றலைக் கொண்டது. இந்த விண்கலம் சி-25 கிரையோ நிலை உள்பட முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டது.

இந்தநிலையில், இஸ்ரோ அதன் அடுத்த தலைமுறை ராக்கெட்டுக்கான எல்.ஓ.எக்ஸ்-மீத்தேன் இயந்திரத்தின் முதல் சோதனையை நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் வெற்றிகரமாக நடத்தியது. இது அடுத்த தலைமுறை விண்கலத்துக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்