எர்ணாகுளம்: பள்ளியில் ஒன்றாகப் படித்தபோது மலர்ந்த காதல் கைகூடாமல் போன நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தபோது தங்கள் குடும்பங்களை மறந்து முன்னாள் காதலர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்தது.
எர்ணாகுளம், இடுக்கி பகுதிகளைச் சேர்ந்த அவ்விருவரும் ஓடிப்போக மூன்று வாரங்களாகத் திட்டமிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இருவருக்கும் ஏற்கெனவே மணமாகி, குழந்தைகளும் உள்ளனர்.
இதனிடையே, ‘அவர்களைக் காணவில்லை’ என்று அவ்விருவரின் குடும்பங்களும் காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகாரளித்தன.
இதனையடுத்து, காவல்துறையின் இணையப் பிரிவின் துணையுடன் விசாரணை தொடங்கியது. அதன்மூலம் காதலர்கள் இருவரும் சேர்ந்து திருவனந்தபுரம், பாலக்காடு, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தபின், அவர்களைத் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்ட காவல்துறை, அவர்களை மூவாட்டுப்புழா காவல் நிலையத்தில் முன்னிலையாகும்படி அறிவுறுத்தியது.
அதன்படி, அவ்விருவரும் கடந்த சனிக்கிழமை அக்காவல் நிலையத்தைச் சென்றடைந்தனர். அதனைத் தொடர்ந்து, காவல்துறை அவ்விருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக அறியப்படுகிறது.
மூவாட்டுப்புழா பள்ளியில் 1987ஆம் ஆண்டு அவர்கள் பத்தாம் வகுப்பில் ஒன்றாகப் படித்ததாகக் கூறப்பட்டது.