ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நகரிலும் அதை ஒட்டியுள்ள வடக்கு காஷ்மீர் பகுதியிலும் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அது ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாகப் பதிவானது என்றும் நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் பட்டான் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் கூறினர்.
பாரமுல்லா சோபூர், புல்வாமா மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம், காஷ்மீர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பலர் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். பல இடங்களில் வீட்டில் உள்ள பொருள்கள், சன்னல்கள், கதவுகள் ஆகியவை அதிர்ந்து சத்தம் எழுப்பியதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

