லே (லடாக்): லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயரமான பகுதி ஒன்றிலிருந்து இந்தியத் தற்காப்பு ஆய்வு, மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவப் போர் வான்குடை புதன்கிழமை (ஆகஸ்ட் 26) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 22,000 அடி உயரத்தில், உறைநிலைக்குக்கீழ் 15 டிகிரி செல்சியஸ் (-15°C) கடுங்குளிரில் அந்தச் சோதனை நடத்தப்பட்டது.
தற்காப்பு ஆய்வு, மேம்பாட்டு அமைப்பின் ஏடிஆர்டிஇ ஆய்வுக்கூடத் தலைமைச் சோதனையாளர் விங் கமாண்டர் ராகுல்ஜா, முதன்மை வாரண்ட் அதிகாரிகள் ஆர்.ஜே.சிங், விவேக் திவாரி மூவரும் அந்த வான்குடை மூலம் குதிக்கும் சாகசச் செயலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து டிஆர்டிஓ அமைப்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், லடாக்கில் உள்ள நியோமா, மூத் பகுதியில் இச்சோதனை நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “சோதனைக் குழுவினர், இந்த ராணுவப் போர் வான்குடை அமைப்புடன், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாரா கம்ப்யூட்டர், உயிர்வாயுக் கருவிகள், சிறப்பு உடைகள் உள்ளிட்ட அனைத்துத் துணை அமைப்புகளையும் வெற்றிகரமாகப் பயன்படுத்தினர்.
“20,000 அடி உயரத்தில் வான்குடை திறக்கப்பட்டு, கடல் மட்டத்திலிருந்து 13,700 அடி உயரத்தில் குழுவினர் பாதுகாப்பாகத் தரையிறங்கினர்,” என்று அது தெரிவித்துள்ளது.
கடுங்குளிர் நிலவும் உயரமான மலைப் பகுதிகளில், இந்த வான்குடை அமைப்பின் செயல்திறன், நம்பகத்தன்மை, ராணுவப் பயன்பாட்டுத்தகுதி ஆகியவை இச்சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டதாகக் கூறியுள்ள டிஆர்டிஓ, இது பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தற்சார்பு இலக்கை மேலும் வலுப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.


